ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளத்தின் கே.பி. சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது.. இன்று நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை சாலையில் துரத்திச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், பவுடேல் உயிருக்கு பயந்து ஓடுவதையும் 20-க்கும் மேற்பட்டோர் துரத்திச் செல்வதையும், மற்றவர்கள் அவரை அடிப்பதையும் காண முடிகிறது. சிலர் அவரை எட்டி உதைப்பதையும் அதில் பார்க்க முடிகிறது..
இன்று அதிகாலை, போராட்டக்காரர்கள் அவரது வீட்டைத் தாக்கி தீ வைத்ததை அடுத்து, பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “பிரதமர் பதவியில் இருந்து இன்று முதல் ராஜினாமா செய்துள்ளேன்… பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு மற்றும் தீர்வு நோக்கி மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக,” என்று அவர் தெரிவித்திருந்தார்..
பிரதமரை ஒலியைத் தவிர, அவரது அரசாங்கத்தின் குறைந்தது 4 அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து நேபாள அரசு சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நேற்றிரவே நேபாள அரசு நீக்கியது..
ஆனாலும் இன்றும் போராட்டங்கள் தீவிரமடைந்தது.. மேலும் போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா ஆகியோரும் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) முழுமையாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பை வழங்க நேபாளி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
நேபாள நாடாளுமன்றத்தை கலைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை பெருமளவில் ராஜினாமா செய்யவும், போராட்டங்களின் போது “துப்பாக்கிச்சூடு நடத்த” அல்லது வன்முறை உத்தரவுகளை வழங்கியவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்யவும் போராட்டக் குழு கோரிக்கை விடுத்தனர். முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, இடைக்கால அரசாங்கம் போராட்டக்காரர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்று போராட்டக் குழு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.