2-ம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை மிரள வைத்த பெண் பற்றி தெரியுமா?.. மறக்கப்பட்ட முஸ்லிம் இளவரசியின் சுவாரசிய வரலாறு குறித்து தற்போது பார்க்கலாம்.
போர் என்பது ஆண்களுக்கானது என்பதை மாற்றி, வரலாற்றை மீண்டும் எழுத நினைத்த ஒரு பெண் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்… திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், காலம், பாலினம், தேசம் என அனைத்து தடைகளையும் தாண்டி இரண்டாம் உலகப் போரின் மிகவும் துணிச்சலான ரகசிய உளவாளிகளில் ஒருவராக மாறினார். பார்ப்பதற்கு ஒரு பூவை போல அழகு பதுமையாக வலம் வந்த அவர் புயலாகவும் இருந்தார்.. அவர் வேறு யாருமில்லை நூர் இனாயத் கான்.
1914 இல் மாஸ்கோவில் ஒரு இந்திய தந்தை மற்றும் அமெரிக்கத் தாய்க்கு பிறந்தாலும், நூருக்கும் இந்தியாவுக்கும் ஆழமான தொடர்பு இருந்தது.. அவரது தந்தை ஹஸ்ரத் இனாயத் கான், ஒரு சூஃபி ஆன்மீகவாதி மற்றும் இசைக்கலைஞர் ஆவார், அவர் மைசூரின் புகழ்பெற்ற ஆட்சியாளரான திப்பு சுல்தானின் வம்சாவளியை சேர்ந்தவர். எனினும் ஹஸ்ரத்தின் குடும்பம் பின்னர் பிரான்சில் குடியேறியது, அங்கு நூர் இசை, இலக்கியம் மற்றும் அமைதியின் இலட்சியங்களில் மூழ்கி வளர்ந்தார்.
ஆனால் அடால்ஃப் ஹிட்லரின் ஆளுமை ஐரோப்பாவின் மீது படர்ந்தபோது, நூர் வரலாற்றையை மாற்றும் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ஜெர்மன் படையெடுப்பின் போது பிரான்சை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், நூர் தனது குடும்பத்துடன் பிரிட்டனுக்கு வந்தார். ஒரு அமைதியான குடும்பத்தில் வளர்ந்தாலும், அவர் பிரிட்டிஷ் போர் முயற்சியில் இணைந்தார்.. ஆனால் துப்பாக்கிகளுடன் அல்ல, குறியீடுகள், ரேடியோக்கள் மற்றும் வெளிப்படையான அறிவுத்திறன் மூலம் ரகசிய உளவாளியாக மாறினார்.. பாசிசத்தை உள்ளிருந்து எதிர்த்துப் போராடுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
எதிரிகளின் எல்லைகளுக்குப் பின்னால் உளவு பார்ப்பதற்கும், நாசவேலைகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ரகசிய அமைப்பான பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கை நிர்வாகியால் (SOE) அவர் பணியமர்த்தப்பட்டார். நாஜி ஆக்கிரமித்த பிரான்சிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வயர்லெஸ் ஆபரேட்டர்களில் ஒருவரானார் நூர். “மேடலின்” என்ற குறியீட்டுப் பெயரில் அவர் செயல்பட்டார். மேரி ரெனியர் என்ற புனைப்பெயரை ஏற்றுக்கொண்டார். பிரான்ஸை சேர்ந்தவர்கள் கூட அவரை தங்களில் ஒருவர் என்று நம்பும் அளவுக்கு வேலை பார்த்தார்..
1943 கோடையில், நூர் பிரான்சுக்குள் பாராசூட் மூலம் சென்று B2 ரேடியோ செட்டைப் பயன்படுத்தி லண்டனுக்கு உளவுத்துறை தகவலை அனுப்பத் தொடங்கினார். பாரிஸின் தெருக்களில் தொடர்ந்து சுற்றித் திரிந்தார், நாஜி படையின் இயக்கங்கள் மற்றும் எதிர்ப்புத் தரவுகளைச் சேகரித்தார். மற்ற முகவர்கள் கைப்பற்றப்பட்ட பிறகு, பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நெட்வொர்க்குகளுக்கு லண்டன் கொண்டிருந்த ஒரே இணைப்பு அவரது ஒளிபரப்புகள் மட்டுமே. மிகப்பெரிய ஆபத்து இருந்தபோதிலும், தனது பணியை கைவிட மறுக்கவில்லை. மற்றவர்கள் வீழ்ந்த போது, தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
ஆனால் அவருடன் இருந்தவர்களே அவருக்கு துரோகம் செய்தனவர்.. 1943-ம் ஆண்டு, அக்டோபர் மாதம்,, நூரின் அழகு, அவரின் பணிகளுக்கு கிடைத்த பாராட்டுகளால் ஏற்பட்ட பொறாமை கொண்ட கூட்டாளியின் சகோதரி நாஜிக்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து நூர் கைது செய்யப்பட்டார். சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும், அவரின் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை… பதிவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகளின்படி, கைது செய்யப்பட்டபோது அவளைத் தடுக்க குறைந்தது 6 ஜெர்மன் அதிகாரிகள் தேவைப்பட்டனர்.
விசாரணை என்ற பெயரில் சங்கிலிகளால் சித்திரவதை செய்யப்பட்ட நூர், தனது பெயரைக் கூட வெளியே சொல்லவில்லை.. அவர் பலமுறை தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் அவருக்கு “மிகவும் ஆபத்தான” கைதி என்ற முத்திரை கிடைத்தது. இறுதியில், அவள் ஜெர்மனியின் பிரபலமான போர்ஷைம் சிறைக்கும் பின்னர் டச்சாவ் வதை முகாமுக்கும் மாற்றப்பட்டார்.
அங்கு, செப்டம்பர் 13, 1944 அதிகாலையில், நூர் இனாயத் கான் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிர் பிரிந்த போது அவருக்கு வெறும் 30 வயதுதான். அவரின் வாயில் இருந்து வந்த கடைசி வார்த்தை ‘விடுதலை’ என்பது தான்..
பல ஆண்டுகளாக, நூரின் பெயர் வரலாற்றின் குறிப்புகளில் புதைந்து கிடக்கிறது. ஆனால் அவரது துணிச்சலுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகவில்லை. மரணத்திற்குப் பிறகு, அவருக்கு பிரிட்டனில் ஜார்ஜ் கிராஸ் மற்றும் பிரான்சில் குரோயிக்ஸ் டி குயர் விருதுகள் வழங்கப்பட்டன. இவை துணிச்சலுக்காக வழங்கப்படும் இரண்டு மிக உயர்ந்த விருதுகள்.
ஒரு பெண்ணின் மிகப்பெரிய சொத்து என்பது அழகு தான் என கருதப்பட்ட ஒரு காலத்தில், அறிவு, மன உறுதி மற்றும் தியாகம் ஆகியவை வரலாற்றை மீண்டும் எழுத முடியும் என்பதை நூர் இனாயத் கான் நிரூபித்தார். இன்று, லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அவரின் புகழை பறைசாற்றுகின்றன. ஆனால் அவரின் தாயகத்தில், அவரது கதை ஒரு மறைக்கப்பட்ட அத்தியாயமாகவே உள்ளது.
Read More : மனிதர்கள் முதல் விலங்குகள் வரை.. பார்வையை இழந்த விசித்திர கிராமம்..!! பின்னணி இதோ..