மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் உள்ள மல்வானி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், அந்த 15 வயது சிறுமி 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி படிக்காமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதைக்கவனித்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை கண்டித்து செல்போனை வாங்கிக் கொண்டனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.