ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வெகுகாலமாக செயல்பட்டு வருகிறது. அந்த தொடக்கப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பள்ளியில் இரு கழிவறைகள் இருக்கின்றன.
அதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொரு கழிவறையை மாணவர்களும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கழிப்பறைகளை நாள்தோறும் 2 மாணவர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி அறிவுறுத்தியதாக தெரிகிறது.
தலைமை ஆசிரியரின் இந்த அறிவுறுத்தல் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் வழங்கினர். இது குறித்து விசாரணை நடத்துவதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு தெரிவித்துள்ளார்.
அதன் பெயரில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு சம்பவ இடத்திற்கு சென்ற போது தலைமை ஆசிரியை கீதாராணி பள்ளிக்கு வராமல் ஒரேயடியாக தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய சொன்னது உண்மைதான் என்று தெரிய வந்ததையடுத்து தலைமை ஆசிரியர் கீதாராணி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் தனது உடமைகளை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த தலைமை ஆசிரியை கீதா ராணியை, காவல் துறையினர் கைது செய்து ஈரோடு மகிலா நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். 15 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி கோவை மத்திய சேறையில் அடைக்கப்பட்டார் கீதா ராணி. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.