கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T.பாளையம் கிராமத்தில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இரு தினங்களுக்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்த நிலையில், ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவரை யாரேனும் கொலை செய்து இங்கு போட்டுவிட்டு சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடலூர் பார்வதிபுரம் ஊரை சேர்ந்த ராஜசேகர் என்பதும், அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இவரது மனைவி மஞ்சுளா என்பது தெரியவந்தது.
பின்னர் இறந்த ராஜசேகர் மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இதில் ராஜசேகருக்கும் மஞ்சுளாவுக்கும் திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே, ராஜசேகருக்கு திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக ராஜசேகர் அடிக்கடி திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் தனது குடும்பத்திற்கு சரியான முறையில் பணம் வழங்காததால் மஞ்சுளா, அவரது 3 பெண் பிள்ளைகள் மிகவும் அவதியடைந்து வந்துள்ளனர்.
மேலும் மஞ்சுளாவிற்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சரும் கொடுத்து வந்துள்ளார். 3 பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதற்கு ஒத்துழைக்க மறுத்தால் மின்சாரத்தை நிறுத்தி விட்டு சென்று விடுவார் ராஜசேகர். இதனால் குழந்தைகள் இரவில் கொசுக்கடி உள்ளிட்ட பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். மேலும், மஞ்சுளா குடும்ப கஷ்டம் காரணமாக வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால், ராஜசேகர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து வீண் தகராறு செய்வதோடு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இந்நிலையில், கடலூர் முதுநகர் அருகே தொண்டமநத்தம் ஊரை சேர்ந்த தனது நெருங்கிய தோழி வினோதினியிடம் இது சம்பந்தமாக தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் மஞ்சுளா. தொடர்ந்து அவரின் உதவியுடன் கணவரை கொலை செய்ய முடிவும் செய்துள்ளார்.
சம்பவத்தன்று வினோதினி வீட்டிற்கு விருந்துக்கு சென்றதாகவும், அங்கு கணவருக்கு வழங்கிய மதுபானத்தில் விஷம் ஊற்றி கொடுத்ததாகவும், அதில் அவர் மயங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்றும் மஞ்சுளா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எனது கணவர் ராஜசேகர் உடலை அங்கிருந்து கொண்டு சென்று கரும்பு தோட்டத்தில் யாரும் பார்க்காத வகையில் தூக்கி வீசி விட்டு குடும்பத்துடன் வினோதினி கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டார் எனவும் மஞ்சுளா கூறினார். இதனையடுத்தி வினோதினி, மற்றும் அவரது கணவர் சசிகுமார், அவருடைய நண்பர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.