உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் அனேக் பால் – சுமன் பால் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அண்மைக்காலமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, சில வாரங்களில் தகராறு முற்றிபோய் இருவரும் தொடர்ந்து வாக்குவாதம், மோதல் போக்கில் இருந்துள்ளனர். அதேபோன்று கடந்த ஒரு வாரம் அனேக் – சுமன் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அனேக் பால், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி சுமனை சுட்டுக் கொன்றார். அதே குண்டு பாய்ந்ததில் அனேக் பாலும் இறந்திருக்கிறார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் ஒரே குண்டு பாய்ந்து உயிரிழந்தது பெரும் குழப்பமாகவும் வியப்பாகவும் இருந்தது. இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பத்திரிகையாளர்கள் கூறியதாவது, அனேக் அடிக்கடி அமானுஷ்ய பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். தம்பதியர் இடையிலான சண்டைக்கு இந்த வினோத பூஜைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. சம்பவத்தன்று, ஒரு வழக்கமான பூஜையில் அமர்ந்தார்.
ஒன்றரை மணி நேரம் நீடித்த பூஜையின் நிறைவாக எழுந்த வந்த அவர், மனைவியை மென்மையாக அழைத்தார். கணவரின் மாறிய முகமும், குரலும் சுமனின் கோபத்தையும் போக்கச் செய்ய அருகே சென்றார். மனைவியை ஆதுரமாய் அணைத்த அனேக், கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை சுமன் முதுகில் வைத்து ட்ரிக்கரை அழுத்தினார். அது நாட்டுத் துப்பாக்கி என்பதால் பெரும் சத்தத்துடன் புல்லட் முதலில் மனைவி சுமன் முதுகை துளைத்து, பின்னர் மனைவியை கட்டி அணைத்திருந்த கணவன் அனேக் நெஞ்சுக்குள் துளைத்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.