பெற்றோர்கள் முன்னிலையில் இரு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியான லால் பகதூர் சாஸ்திரி வீதியில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகளை குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி. பெண்கள் அரசுப் பள்ளியில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 12ஆம் வகுப்பு படிக்கும் என்.கே.சி. பள்ளி மாணவிகளும், சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரண்டு பள்ளி மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருந்த நிலையில், இன்று காலை பெற்றோர்கள் முன்னிலையிலயே வகுப்பறையில் மாணவிகளுக்குள் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதனை கண்ட பெற்றோர்கள் கூச்சலியிட்டவாறு மாணவிகளை மோதலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை தங்களது பெற்றோர்களுடன் தங்கள் படித்து வந்த பள்ளிக்கே மீண்டும் அனுப்பி வைத்தனர். மேலும் என்.கே.சி. பள்ளி மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் போதுமான பாதுகாப்பு இல்லை எனக்கூறி தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த இரு அரசு பள்ளி மாணவிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.