திரிபுராவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரை பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பாழடைந்த மற்றும் அழுக்குப் பெட்டிகளைக் கொண்ட ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதனால் இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரிபுராவில் உள்ள உதய்பூர் ரெயில் நிலையத்தை ஜூன் 6-ம் தேதி வந்தடைய வேண்டிய இந்த ரயில், ஜூன் 9-ம் தேதி மாலை 6:30 மணிக்கே வந்து சேர்ந்தது. ரயிலின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை சமூக ஊடக தளங்களில் கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 12, 2025-க்குள் முழு பட்டாலியனும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தது. இந்தத் தாமதம் திரிபுரா, குவஹாத்தி, மிசோரம் மற்றும் கச்சார் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,200 BSF வீரர்களை பாதித்துள்ளது.
இதையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை இல்லாத பெட்டிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி அலிபுர்தர் ரயில் டிவிஷனை சேர்ந்த 3 மூத்த செக்சன் இன்ஜினியர் மற்றும் கோச்சிங் டெப்போ அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛பாதுகாப்பு படையினர் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற அலட்சியத்தை எந்த மட்டத்திலும் பொறுத்து கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது. மேலும் இதற்காக 581 கம்பெனியை சேர்ந்த 42 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: தூள்..! மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000…! முதல்வரின் சூப்பர் திட்டம் அறிவிப்பு…!