இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார்.
2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு ஆபாச இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீடியோ அவரின் கவனத்தை ஈர்த்தது.
சில விநாடிகளில் அந்த ஹோட்டல் அறை, நிகழ்வுகளின் வரிசை, பின்னர் அந்த வீடியோவில் இருப்பது தாம் என்பதையும் எரிக் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஜோடி அறைக்குள் நுழைந்து, பைகளை வைத்துவிட்டு, பாலியல் உறவில் ஈடுபடுவது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. இவை அனைத்தும் அறியாமலேயே ஹோட்டல் அறையில் மறைக்கப்பட்ட கேமராவால் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்த வீடியோ அவர்களின் அனுமதி இன்றி இணையத்தில் பதிவேற்றப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வகையில் பரவி இருந்தது. இந்த அனுபவம் குறித்து பேசும் எரிக், “இது மிகவும் பயங்கரமான அனுபவம். ஒரு மணி நேரத்திற்கு அருகில், மறைக்கப்பட்ட உளவு கேமரா எங்களை பதிவு செய்திருக்கிறது” என்று கூறினார்.
மேலும் “ வழக்கமான ஆபாச வீடியோக்கள் மிகவும் செயற்கையாக இருக்கும். ஆனால் இவற்றில், படம் பிடிக்கப்படுவதாக அந்த நபர்களுக்குத் தெரியாது” என்று கூறினார். ஆனால், ஒரு வீடியோவில் தாமே இருப்பதை கண்டதும், அவரது மனநிலை முற்றிலும் மாறியது.
இந்த விஷயத்தை எரிக் தனது காதலி எமிலியிடம் கூறியபோது, முதலில் அவர் நம்பவில்லை. ஆனால், வீடியோவை பார்த்ததும், நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அலுவலகத் தோழர்கள் யாராவது இதைப் பார்த்திருப்பார்களோ என்று மிகவும் பயந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த ஜோடி பல வாரங்கள் ஒருவருடன் ஒருவர் பேசவே இல்லை. வெளியே செல்லும்போது அடையாளம் தெரியாமல் இருக்க தொப்பி அணிவது, மேலும் ஹோட்டல்களில் தங்குவதை தவிர்ப்பது போன்றவற்றை அவர்கள் கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
இந்த அனுபவம், உளவு கேமரா ஆபாச உள்ளடக்கங்கள் குறித்து தனது பார்வையை முழுமையாக மாற்றிவிட்டதாக எரிக் கூறினார். இனி இதுபோன்ற இணையதளங்களை அவர் பயன்படுத்துவதில்லை என்றும், தன்னையும் எமிலியையும் காட்டும் அந்த வீடியோ மீண்டும் வெளியானதா என்பதை சரிபார்க்க மட்டுமே சில நேரங்களில் அந்த தளங்களை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உளவு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் ஆபாச படங்கள் தயாரிப்பதும், பகிர்வதும் சட்டவிரோதமானதாக இருந்தாலும், இவ்வகை வீடியோக்கள் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் ரகசியமாக பதிவு செய்யப்படுகின்றன.
இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு ஏப்ரலில் சீன அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி, ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது அறைகளில் மறைக்கப்பட்ட கேமராக்கள் உள்ளதா என்பதை அடிக்கடி சோதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் இருந்தாலும், பிரச்சனை முழுமையாக தீரவில்லை. பல இணையதளங்களில், ஹோட்டல் அறைகளில் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உளவு கேமரா வீடியோக்கள் இன்னும் விற்பனை செய்யப்படுகின்றன. BBC நடத்திய விசாரணையில், சீனா முழுவதும் உள்ள ஹோட்டல் அறைகளில் 180-க்கும் மேற்பட்ட மறைக்கப்பட்ட கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..! PDF ஆவணத்தில் 859 முறை இடம்பெற்ற ஒரே சொல்..! இதற்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்..!



