கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது. அதன் பிறகு வானிலை அடியோடு மாறியது போல, மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வந்தது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) மிக கனமழை ( ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 29-ம் தேதி முதல் 01-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ முதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையில் 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.