திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜன் மகளிர் இலவச பேருந்தை பெண்களின் ஓசி பஸ் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் தமிழ்நாடு முழுவதும் தினசரி பணிக்கு செல்லும் பெண்கள், அவசரமாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் என லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழக அரசின் மகளிர் இலவச பயணத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், ஒரு சிலரின் கேலி விமர்சனம் அவ்வபோது விவாதத்தை ஏழுப்புகிறது. முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிக்கின்றனர் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜனும் அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது தொகுதி மக்க்ளை சந்தித்த அவர் ஓசி ஓசி என பலமுறை பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read more: விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.. 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!! தொற்று பாதிப்பு 7121 ஆக உயர்வு..!!