ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.
அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இப்படி ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆற்றுக்கு செல்ல முடியாதவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடுவோம்.
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.
சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு தினம் 2025ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்றாலே மங்களகரமான நாள் என்றாலுமே, தாலி சரடு மாற்ற ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை ஆகிய மூன்று நேரங்களை தவிர்க்கவேண்டும். குரு ஹோரை, சுக்ர ஹோரை போன்ற நல்ல நேரத்தில் சரடு மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்படி, குரு ஹோரை இன்று காலை 11.20 முதல் நண்பகல் 12.27 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. சுக்ர ஹோரை பிற்பகல் 2.42 முதல் 3.49 வரை உள்ளது. எனவே, இந்த நேரத்தில் தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக நண்பகல் நேரத்திற்குள் மாற்றிக்கொள்வது மிக சிறந்ததாகும்.