தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத் தேர்தல் நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், பிப்ரவரி இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து, ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் முடிவுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் காணப்போகும் தொகுதி எது என்பதுதான்.
முதல்முறையாகத் தேர்தல் களத்தை சந்திக்கும் விஜய், தனது முதல் அடியை எங்கிருந்து தொடங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினரிடமும் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அவர் சென்னை மண்டலத்தையே குறிவைப்பார் என தெரிகிறது. குறிப்பாக, ‘விருகம்பாக்கம்’ தொகுதி விஜய்யின் முதல் தேர்வாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
தற்போது திமுக வசமுள்ள இந்தத் தொகுதியில், ஆளுங்கட்சியினரிடையே நிலவும் உட்கட்சிப் பூசல்களும், அதிமுக – பாஜக கூட்டணியில் நிலவும் இழுபறிகளும் விஜய்க்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தைத் தேர்ந்தெடுக்க விஜய் தரப்பில் சில சென்டிமென்ட் காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. விஜய் பிறந்து வளர்ந்த சாலிகிராமம் வீடு இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது. மேலும், திரையுலகின் இதயமாக கருதப்படும் கோடம்பாக்கம் இதன் ஒரு பகுதியாக இருப்பதால், சினிமா தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாக்குகள் விஜய்க்கு எளிதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனையூரில் வசித்து வரும் விஜய்க்கு, விருகம்பாக்கம் தொகுதி என்பது வந்து செல்வதற்கும், மக்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கும் ஏதுவான இடமாக இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
இருப்பினும், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களின் கோட்டையாக கருதும் சென்னையில் விஜய்யின் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் விருகம்பாக்கத்தில் இருந்து தொடங்கினால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை.



