கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகவுள்ள பகுதிகளை குறிவைத்து, அங்கிருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றி வந்ததாக கூறப்பட்டது. அதேசமயம், ராமதாஸால் நீக்கப்பட்ட பழைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்றும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலும் வெளியானது. இந்த சூழலில் தான், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவர் ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசியுள்ளார். பாமக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸை சந்தித்து சமாதானம் செய்ய அன்புமணி திட்டமிட்டுள்ளார்.
அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில், இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பால் கருத்து வேறுபாடு முடிவுக்கு வருமா..? என அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.