நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதான பாபுராஜ் (ஐடி மாணவர்) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் கைகூடாத நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணப்பெண் திடீரென தனது முன்னாள் காதலன் பாபுராஜை தொடர்பு கொண்டு, தன்னை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்பேரில், பாபுராஜ் தனது அண்ணன் அரவிந்த்ராஜை அழைத்துக் கொண்டு அதிகாலை 2.30 மணிக்கு களக்காடு மெயின்ரோட்டுக்கு காரில் விரைந்தார். அங்குத் தயாராக நின்றிருந்த புதுப்பெண் ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டார்.
மணமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்வது தவறு என்று பாபுராஜின் அண்ணன் அரவிந்த்ராஜ் கூறியும், அதை பொருட்படுத்தாமல் காதலர்கள் இருவரும் அரவிந்த்ராஜை மட்டும் பாதியில் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாபுராஜின் குடும்பத்தினர், அவரை செல்போனில் நைசாக பேசி மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தனர். திருமணமான பெண்ணை அழைத்து வந்தது தவறு என்றும், உடனடியாக அவரை அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் பாபுராஜுக்கு அறிவுரை கூறினர். அறிவுரையை ஏற்றுக்கொண்ட காதலர்கள், அந்தப் பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க சம்மதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பாபுராஜின் அண்ணன் அரவிந்த்ராஜ், தாயார் சாந்தி, உறவினர் ஆறுமுக பெருமாள், அவரது மனைவி இசைமனோ, சேர்மக்கனி ஆகிய 5 பேர் காரில் அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றனர். மணப்பெண் கடத்தப்பட்ட விவரம் அறிந்ததும், பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா மற்றும் உறவினர் ராஜா உட்பட 4 பேர் ஆத்திரமடைந்துள்ளனர்.
அவர்கள் கைகளில் கம்பு மற்றும் கற்களுடன் வந்து, இளம்பெண்ணுடன் வந்த கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். உயிர் பயத்தில் காருக்குள் இருந்த 5 பேரும் கூச்சலிட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். உடனடியாக களக்காடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார், காருக்குள் அச்சத்தில் இருந்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். அரவிந்த்ராஜ் அளித்த புகாரின் பேரில், மணப்பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் பாபுராஜின் தந்தை ஒரு போலீஸ்காரராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



