திருப்பூரில் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வந்த பாதிரியார் ஒருவர், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, கூனம்பட்டியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளைத் தங்க வைத்து, அவர்களுக்குப் பள்ளிப் படிப்பை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்த காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த 14 வயது சிறுமிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வீட்டிற்குச் சென்று நடந்த கொடுமைகளைத் தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோகிலா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஆண்ட்ரூசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.