உலகின் மிக உயரமான சிலையான குஜராத்தில் உள்ள ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதார் நேற்றிரவு காலமானார்.. நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 100. அவர் வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் நேற்றிரவு பிரிந்தது..
அவரின் மகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் தந்தை ஸ்ரீ ராம் வஞ்சி சுதார் டிசம்பர் 17 அன்று நள்ளிரவில் எங்கள் இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார். ராம் சுதாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தற்போதைய மகாராஷ்டிராவில் உள்ள துலே மாவட்டத்தின் கோந்தூர் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பிறந்த சுதார், சிறு வயதிலிருந்தே சிற்பக்கலையில் ஆர்வம் காட்டினார். மும்பையின் ஜே.ஜே. கலை மற்றும் கட்டிடக்கலைக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற அவர், பல தசாப்தங்களாக நீடித்த ஒரு சிறப்பான தொழில் வாழ்க்கையை உருவாக்கினார்.
அவரது மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில், தியான நிலையில் அமர்ந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையும், நாடாளுமன்ற வளாகத்தில் குதிரையில் அமர்ந்திருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையும் அடங்கும். அவரது மிகவும் சின்னமான படைப்பான ஒற்றுமைச் சிலை, இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலை கௌரவிக்கிறது.
சுதாருக்கு 1999-ல் பத்மஸ்ரீ விருதும், 2016-ல் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டன. சமீபத்தில் அவருக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் உயரிய குடிமகன் விருதான மகாராஷ்டிர பூஷன் புரஸ்கார் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



