தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது கோழிகள் திடீரென இறந்து கிடந்தால் மக்கள் அதனைத் தொடவோ அல்லது சமைத்து உண்ணவோ வேண்டாம். அதேபோல் கோழி இறைச்சியை உண்பவர்கள், அதனை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். பாதியளவு வெந்த நிலையில் இருக்கும் ‘ஹாஃப்-பாயில்’ உணவுகளை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். பொதுவாக ‘ஹாஃப்-பாயில்’ என்ற சொல் முட்டையோடு தொடர்புபடுத்தப்படுவதால், முட்டை பிரியர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய அமைச்சர், “நான் ஹாஃப்-பாயில் என்று குறிப்பிட்டது இறைச்சியைத்தான். கோழி இறைச்சியைச் சமைக்கும்போது அது முழுமையாக வேகாமல் பாதியளவு வெந்த நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்ற ரீதியிலேயே பேசினேன். இறைச்சியை நன்கு வேகவைத்து உண்பதுதான் பாதுகாப்பானது” என்று விளக்கமளித்தார்.



