ஜிம், பிரத்யேக டயட் மட்டுமின்றி, உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர்களும் (Herbal Teas) இயற்கையான அழகு மற்றும் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த மூலிகை டீக்களை தொடர்ந்து குடிப்பதன் மூலம், எந்தவிதச் செயற்கை பராமரிப்புமின்றிப் பொலிவான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி தேநீர் :
பாரம்பரியமாக புனிதமாக கருதப்படும் துளசியில், ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கப் சூடான துளசி தேநீர் அருந்துவது ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் அற்புதச் சக்தி, உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது முகப்பருக்கள் மற்றும் சரும வெடிப்புகளை தடுக்க உதவுவதுடன், உச்சந்தலையில் உள்ள பொடுகைக் குறைத்து, தலைமுடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. துளசியை தொடர்ந்து எடுத்துக்கொள்வது, ஒட்டுமொத்த சருமப் பொலிவுக்கு அடித்தளமிடுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் கெமோமில் தேநீர் :
தற்போது மிகவும் பிரபலமாகி வரும் கெமோமில் தேநீர், அதன் மன அமைதிப்படுத்தும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை இலகுவாக்குவதால், முகம் இயற்கையாகவே பிரகாசமாகத் தோன்றும். இது நல்ல தூக்கத்தை உறுதிசெய்வதால், சரியான ஓய்வு கிடைக்காமல் ஏற்படும் வீக்கம் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க உதவுகிறது. கெமோமில் டீயில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் வயதாகும் நிகழ்வைத் தாமதப்படுத்தி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கப் பங்களிக்கின்றன. வாரம் ஒருமுறை குளிர்ந்த கெமோமில் தேநீரைக் கொண்டு தலைமுடிக்குப் மசாஜ் கொடுப்பது கூடுதல் நன்மை பயக்கும்.
ஹார்மோன் சமநிலைக்குப் பெப்பர்மிண்ட் தேநீர் :
உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, எண்ணெய் பசை அதிகமுள்ள உச்சந்தலைப் பிரச்சனைகள், அல்லது முகப்பருக்கள் இருந்தால், புதினா இலைகளில் செய்யப்படும் தேநீர் சிறந்த தீர்வைத் தரும். இது உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக்குவதுடன், ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது. புதினாவில் உள்ள மெந்தோல் என்ற வேதிப்பொருள், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இந்தத் தேநீர் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. சாப்பிட்டபின் ஒரு கப் பெப்பர்மிண்ட் டீ குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், ஆரோக்கியமான குடல், முகத்தில் பொலிவை நிச்சயம் ஏற்படுத்தும்.
முடி உதிர்தலை தடுக்கும் கிரீன் டீ :
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் கிரீன் டீக்கு ஈடு இணை இல்லை. முடி உதிர்தல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இதில் உள்ள கேடசின்கள் மற்றும் பாலிபினால்கள், முகப்பருக்களைக் குறைத்து, சருமத் துளைகளை இறுக்க உதவுகின்றன. கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் வீக்கம் குறைவதுடன், முடி உதிர்தலும் கட்டுக்குள் வரும். வாரம் ஒருமுறை கிரீன் டீயை ஆறவைத்து முகத்திற்கு டோனர் போலப் பயன்படுத்துவது அல்லது ஷாம்புக்குப் பின் முடியில் மசாஜ் செய்து குளிப்பது கூடுதல் நன்மைகளைத் தரும்.
ஈரப்பதம் அளிக்கும் ரோஜா இதழ் தேநீர் :
காய்ந்த ரோஜா இதழ்களில் செய்யப்படும் தேநீர், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுவதால், வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெறுகிறது. ரோஜா இதழ்களில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, சருமச் சுருக்கங்களைக் குறைத்து, மென்மையாக்குகிறது. ரோஜா தேநீருடன் துளசி இலைகளைச் சேர்த்து அருந்தினால், கூடுதல் ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.
இந்த மூலிகை தேநீர்களின் முழுமையான நன்மைகளை பெற, ஒரு நாள் மட்டும் குடிப்பது பயனளிக்காது. தினமும் ஒரு கப் மூலிகை டீ, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது நீண்ட கால சருமப் பொலிவு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
Read More : விஷமாகும் உணவுகள்..!! மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் ஒளிந்திருக்கும் பேராபத்து..!! மக்களே உஷார்..!!



