காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் வசந்தா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் சங்கர் (47), இளைய மகன் வெங்கடேச பெருமாள் (38). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக வீட்டில் பாகம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் இளைய மகன் வெங்கடேச பெருமாள் காஞ்சிபுரம் அருகே வசித்து வரும் மாமியார் வீட்டுக்கு சென்று வசித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி சங்கரிடம் தாய் வசந்தா வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இன்னொரு வீடு கட்டலாமே என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரும், அவரது மனைவி சாந்தி இருவரும் வசந்தாவை தரக்குறைவாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தா மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரிடம் செங்கல்பட்டு நடுவர் மன்ற நீதிபதி லாவண்யா வாக்குமூலம் பெற்றார் அப்போது அவரிடம் தன்னை தற்கொலைக்கு தூண்டியது, தனது மகன் சங்கரும் மருமகள் சாந்தியும் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் பெற்று வந்த வசந்தா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வசந்தாவின் கணவர் ஆறுமுகம் பெருநகர் போலீஸ் நிலையத்தில் தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



