சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய காவல் ஆய்வாளர், டிஎஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.. பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் அளிக்கவில்லை.. மாவட்ட எஸ்.பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.. அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை..” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. இந்த வழக்கை நீர்த்துப் போக செய்தால், நீதித்துறை தலையிட வேண்டியிருக்கும்.. அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மதியம் 2.15 ஒத்திவைத்தனர்.. மேலும் விசாரணை அறிக்கையை மதியம் 2.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அஜித் குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் “ சாதாரண கொலை வழக்கு போல் இல்லை, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்திருக்கிறது. அதிகாரமே இத்தகைய மனநிலையை காவல்துறையினருக்கு தந்திருக்கிறது.
இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை வேண்டும்? அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளன.. அவர் உடலில் ஒரு பாகத்தை விடாமல் தாக்கி உள்ளனர். கடுமையான காயங்கள் உள்ள நிலையில் இறக்கும் வரை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்படவில்லை.. எஃப்.ஐ.ஆர் பதியாமல் சிறப்புப்படை எப்படி வழக்கை கையில் எடுத்தது? இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது கொடூரமாக இருக்கிறது. ” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்கிறோம் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அதற்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறியதை தொடர்ந்து இதனை கேட்ட நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் தருகிறோம் என்று தெரிவித்தனர்..