தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநில அரசு சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ‘தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்களின் 60 வயது நிறைவுக்குப் பிறகு மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதுமைக் காலத்தில் நெசவாளர்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் வாழ ஒரு வலுவான அடித்தளமாக அமைகின்றன.
இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்புவோர், தாங்கள் அங்கம் வகிக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சங்கத்தின் தீர்மான நகல், சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் மற்றும் உதவி இயக்குநரின் செயல்முறைக் குறிப்புகள் உள்ளிட்ட 7 முக்கிய ஆவணங்களை இணைப்பது அவசியமாகும். குறிப்பாக, வருவாய்த் துறை அல்லது சமூக நலத்துறையின் கீழ் வழங்கப்படும் இதர முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் பயன் பெறவில்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நெசவாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் துணை அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். சென்னை வாசிகளாக இருப்பின், குறளகத்தில் உள்ள கைத்தறி ஆணையரகத்தை அணுகலாம் அல்லது 1800 599 7637 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அழைத்து விபரங்களைப் பெறலாம். கைத்தறித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.



