ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்..
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடதுபுறம் ஆளுநரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கைக்கள் போடப்பட்டிருக்கும்.
சரியாக காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.. அதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்குவார். அவரின் உரையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.
ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.. அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.. தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என விவாதித்து முடிவெடுக்கப்படும்.
எனினும் இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் முறைப்படி உரை நிகழ்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி..
2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை..
2023-ம் ஆண்டு ஆளுநர் தனது மகளிர் முன்னேற்றம், சுய மரியாதை, மதச்சார்பின்மை, கலைஞர் போன்ற வார்த்தை படிக்கவில்லை.. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் கூறியதால் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது..
கடந்த ஆண்டு, அதாவது 2025-ல் ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது.. இந்த கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர். ஆர்.என்.ரவி வெளியேறினார்.. இப்படி ஆளுநர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தனது உரையை முறையாக வாசிப்பாரா? பார்ப்போம் இன்று என்ன நடக்கிறது என்று..!
Read More : 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7.3% ஆக உயர்த்திய IMF..! விவரம் இதோ..!



