இந்தியாவில் உணவு டெலிவரி கலாசாரம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளைத் தேடித் தேடி ஆர்டர் செய்து ருசிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டில் இந்தியர்களின் உணவுத் தேர்வுகள் எப்படி இருந்தன என்பது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்களை முன்னனி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல, இந்தியர்களின் ‘ஆல் டைம் ஃபேவரிட்’ உணவாகப் பிரியாணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அரியணையில் அமர்ந்துள்ளது. ஸ்விக்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 57.7 மில்லியன் சிக்கன் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனை இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு வினாடிக்கும் 3 பிரியாணிகளும், ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 200 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பிரியாணி மீதான இந்தியர்களின் தீராத மோகத்தை இந்தத் தரவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
பிரியாணிக்கு அடுத்தபடியாக, மேற்கத்திய உணவான பர்கர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பீட்சா மற்றும் தென்னிந்தியர்களின் அடையாளமான தோசை ஆகிய உணவுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. ஸ்விக்கி செயலி வாயிலாக கடந்த ஆண்டில் மட்டும் 40.1 மில்லியன் பீட்சா ஆர்டர்களும், 26.2 மில்லியன் தோசை ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், பாரம்பரிய உணவுகளுக்கும் நவீன துரித உணவுகளுக்கும் இடையே ஒரு பெரிய போட்டியே இந்தியர்களின் கிச்சன்களில் (Digital Kitchens) நடந்துள்ளது தெரிகிறது. உணவு டெலிவரி தளங்களின் வளர்ச்சி, மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை எவ்வளவு தூரம் மாற்றியமைத்துள்ளது என்பதற்கு இந்த ஆண்டு அறிக்கை ஒரு சிறந்த சான்றாகும்.



