கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மறைந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதியில் மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காத்தனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் சென்ற பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாரக்ஸ் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மக்களின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.