கங்கை நதியின் நீர் தரத்தை சோதித்த வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம், ஒரு பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் ஜெரமி வேட் (Jeremy Wade). இவர் பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர் மற்றும் உயிரியல் விஞ்ஞானி ஆவார். குறிப்பாக ‘River Monsters’ என்ற நிகழ்ச்சியை தொகுத்ததற்காக இவர் உலகம் முழுவதும் பிரபலமானவர்…
நீர் தர சோதனை – முறையும் விளக்கமும்
வீடியோவில், ஜெரமி வேட் ஒரு அடிப்படை நீர் சோதனை செய்கிறார். மாசுகளை கண்டறியும் ரசாயனங்கள் கலந்த ஒரு சிறிய தொட்டியை பயன்படுத்தி, நீர் நிறம் மாறும் முறையில் சோதனை நடத்துகிறார். அதை விளக்கும்போது அவர், “இளஞ்சிவப்பு (Pink) என்றால் நதி சுத்தமானது. வேறு எந்த நிறம் வந்தாலும் பிரச்சனை இருக்கிறது,” என கூறுகிறார்.
ஒரு அளவுகோல் அமைப்பதற்காக, முதலில் அவர் பாட்டில் மினரல் வாட்டரை சோதிக்கிறார். அந்த நீர் அடர்ந்த இளஞ்சிவப்பு–பழுப்பு நிறமாக மாறுகிறது. இதுவே சுத்தமான நீருக்கு எதிர்பார்க்கப்படும் நிறம் என அவர் விளக்குகிறார்.
கங்கை நீர் மாதிரியில் மாசு
பின்னர், கங்கை நதியில் இருந்து எடுத்த நீரை அவர் சோதிக்கிறார். மினரல் வாட்டருக்கு மாறாக, கங்கை நீர் மாதிரி லேசான பழுப்பு நிறமாக மாறுகிறது. அந்தத் தொட்டியை காட்டிக்கொண்டு அவர், “இது கங்கை நீர். இதன் அர்த்தம் என்ன? இதில் மலத்தில் இருக்கும் கொலிஃபார்ம் (faecal coliform) பாக்டீரியா உள்ளது. அடிப்படையில் சொன்னால், இங்குள்ள நீர் மனித கழிவுகளால் நிரம்பியுள்ளது,” என்று கூறுகிறார்.
மத நம்பிக்கைகள் மற்றும் உணர்ச்சிகள்
கங்கை நதியுடன் தொடர்புடைய பண்பாட்டு மற்றும் மத உணர்ச்சிகளையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்த நதி கோடிக்கணக்கான இந்துக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது.
“கங்கை சுத்தமில்லை என்று சொல்வது பல இந்துக்களுக்கு மிகவும் அவமானமாக தோன்றலாம்,” என்று ஜெரமி வேட் வீடியோவில் கூறுகிறார். மேலும், ஒரு சாதுவுடன் நடந்த சந்திப்பை நினைவுகூர்கிறார். அந்த சாது அவரை நதியில் சடங்கு குளியல் எடுக்க அழைத்ததாகவும், அதை அவர் “சற்று சங்கடமான நிலை” என விவரிக்கிறார். அவமதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, அந்தச் சடங்கில் கலந்து கொண்டதாகவும் கூறுகிறார்.
சடங்கு குளியல் மற்றும் தனிப்பட்ட அனுபவம்
வீடியோவில், ஜெரமி வேட் நதிக்குள் இறங்கி, அந்த சாதுவின் செயலை பின்பற்ற முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.. பின்னர், நீந்துவதும் அந்தச் சடங்கின் ஒரு பகுதிதான் என்பதை அவர் முன்கூட்டியே அறியவில்லை என்று ஒப்புக்கொள்கிறார்.
அந்த அனுபவத்தைப் பற்றி பேசும்போது, “இது உண்மையில் சற்றே புத்துணர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், என்னைச் சுற்றி நான் பார்க்கும் விஷயங்களை நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.. குறிப்பாக மேற்பரப்பில் மிதப்பதும், நான் காலால் மிதிப்பதும். ” என அவர் கூறுகிறார்..
வீடியோவில் அந்த சாது நேரடியாக நதிநீரை குடிப்பதும் காட்டப்படுகிறது. ஆனால் வேட் அதை செய்யாமல், நீரை உதடுகளுக்கு மட்டும் கொண்டு செல்கிறார். “நான் உண்மையிலேயே புத்துணர்ச்சியாக உணர்கிறேன். நாள் முழுவதற்கும் தயார் ஆனது போல உள்ளது. எனக்கு வயிற்றுப்போக்கு அல்லது அதைவிட மோசமான ஏதாவது வரும் என்பதைக் காலமே காட்ட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினைகள்
இந்த பதிவு சமூக ஊடகங்களில் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியது. பலர் மாசு மற்றும் மதத்தின் பங்கு குறித்து கவலை தெரிவித்தனர். ஒருவர், “மத நம்பிக்கைகள் கங்கையை கொன்றுகொண்டிருக்கின்றன; ஞானம் இல்லாத கல்வி இன்னொரு வகை அறியாமைதான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “மதத்தின் பெயரில் முழு இந்தியாவும் அழிவை நோக்கி செல்கிறது. எந்த மதமும் மற்றொன்றை விட மேலானது அல்ல; எந்த வேதமும் அறிவியலை மிஞ்ச முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர் , “எங்கள் அன்பான கங்கையை சுத்தம் செய்வதாக சொல்லி, வரிப்பணத்தை இவ்வளவு வீணடிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மற்றொரு பயனர் “நம்பிக்கை மக்களை இவ்வளவு கண்மூடித்தனமாக்குகிறது; மக்கள் வழிபாட்டில் மூழ்கி, நதியின் நலனைக் கவனிக்கவே நேரமில்லை. இன்னும் இது ஆபத்தாக தோன்றவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார்..



