தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கூட்டணியை பலமாக நிலைநிறுத்தி இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருவது, அவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், அண்மையில் மதிமுக-வில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கிய மல்லை சத்யா, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
எனினும், மதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுக கூட்டணியில் மதிமுகவும் உள்ளது. ஆனால், அந்தக் கூட்டணியில் மதிமுக எப்போதும் மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறது. மதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை மத்திய அமைச்சர் முருகன் மறைமுகமாகவே தெரிவித்திருக்கிறார். எனவே, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் உள்ளது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
துரை வைகோவுக்கு சவால் :
மேலும், மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான துரை வைகோவையும் மல்லை சத்யா கடுமையாக விமர்சித்தார். “துரை வைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனித்துப் போட்டியிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என்றும் சவால் விடுத்தார்.
சமீப காலமாகவே மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, திமுகவுக்கு எதிராகப் பல விவகாரங்களில் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மல்லை சத்யாவின் இந்த வெளிப்படையான பேச்சு, திமுக கூட்டணியில் உள்ள குழப்பங்களை மேலும் அதிகரித்துள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Read More : மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



