ஒவ்வொரு இந்திய இல்லத்தின் சமையலறையிலும் அஞ்சறை பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்குவது பூண்டு. வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருளாக பூண்டை பார்க்க முடியாது. இது உண்மையில் இயற்கை நமக்கு அளித்த ஒரு மகத்தான மருந்தகம். “உணவே மருந்து” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் பூண்டு, பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. நவீன மருத்துவ ஆய்வுகள் பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.
பூண்டில் வைட்டமின் சி, பி6, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செறிந்துள்ளன. இவை உடலின் பாதுகாப்பு அரணை பலப்படுத்தி, தொற்று நோய்கள் நம்மை நெருங்காமல் காக்கின்றன. குறிப்பாக, மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை இது பெருமளவு குறைக்கிறது. ஆய்வுகளின் படி, தினசரி உணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்குச் சளி பிடிக்கும் அபாயம் 63 சதவீதத்திற்கும் மேலாகக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பலரையும் அச்சுறுத்தும் உயர் இரத்த அழுத்தத்திற்குப் பூண்டு ஒரு சிறந்த இயற்கை மாற்றாக அமைகிறது. இதிலுள்ள ‘அல்லிசின்’ (Allicin) என்ற வேதிப்பொருள், இரத்த நாளங்களைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் இதயம் தொடர்பான தீவிர பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பூண்டைச் சமைத்து உண்பதை விட, பச்சையாக உட்கொள்ளும் போது இந்த அல்லிசின் சத்து முழுமையாகக் கிடைக்கிறது.
இரத்த அழுத்தத்தைப் போலவே, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் (LDL) கரைப்பதிலும் பூண்டு மிகச்சிறந்த பணியாற்றுகிறது. இரத்தத்தில் உள்ள ‘கெட்ட’ கொழுப்பைக் குறைத்து, இதயத்திற்கு நன்மை செய்யும் ‘நல்ல’ கொழுப்பின் (HDL) அளவை இது உயர்த்துகிறது. இயற்கை ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ள பூண்டு, தொண்டை வலி மற்றும் பருவகால நோய்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு எளிய வீட்டு வைத்தியமாகும்.
Read More : ரிஸ்க் இல்லாத லாபம்..!! வெறும் ரூ.1,000 முதலீடு போதும்..!! வட்டி மூலமே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..!!



