உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்தபோது உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது, ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை விசாரித்தபோது, ராணிக்கு 52 வயதாவதும், அவருக்கு 4 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த உண்மை அருணை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண், கோபமடைந்தார்.
பின்னர், கோபத்தை வெளிக்காட்டாமல் அருண் ராணியிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். இதற்கிடையில், ராணி அருணுக்குத் தொலைபேசி செய்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அவரது தாவணியைக் கொண்டே ராணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை அதே இடத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டார். ராணியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.