பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் செருப்பை வைத்து குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாம்னி கிராமத்தில் காதி ஆற்றில் பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டது. அதில், இறந்த பெண்னின் காலில் அணிந்திருந்த செருப்பில் கடை ஒன்றின் பெயர் இருந்தது. அதனை வைத்து ஒவ்வொரு கிளைகளிலும் பெண்ணின் புகைப்படத்தை வைத்து விசாரித்ததில் அவருடன் ஒரு நபர் வந்திருந்தது தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஊர்வசி (27). அவருடன் இருந்த நபர் ரியாஸ் கான்.

தேவ்னார் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் கான் ஜிம் பயிற்சியாளராக இருக்கிறார். அவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதற்கிடையே, ரியாஸ் கானுக்கு ஊர்வசியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது. இதனால், கள்ளக்காதலி ஊர்வசி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு மறுத்துள்ளார் ரியாஸ். தொடர்ந்து ஊர்வசி போலீஸில் புகார் செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அவர் ஊர்வசியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். தனது நண்பரான இம்ரான் என்பவருடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஊர்வசியை, ரியாஸ் கான் காரில் அழைத்துக்கொண்டு ஷில்பாடா நோக்கிச் சென்றார். அப்போது, ஊர்வசியைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை ஆற்றில் போட்டுவிட்டு அவரும், அவரது நண்பரும் சென்றுள்ளனர். இந்நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.