காதலனுடன் கைகோர்க்க கல்லூரி மாணவி கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் மூடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது தந்தையுடன் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். மாணவியின் தந்தை எவ்வளவு முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “என் காதலன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடத்தல் நாடகத்தை நானும் என் காதலனும் சேர்ந்து தான் நடத்தினோம். நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

ஓராண்டுக்கு முன்னரே நான் என் காதலனை திருமணம் செய்திருந்தேன். அப்போது நான் மைனர் என்பதால் போலீஸ் எங்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். தற்போது நான் மேஜர் என்பதால் எனக்கு வீட்டில் மற்றொரு நபருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்த நிலையில், நான் என் காதலனை திருமணம் செய்து கொண்டேன்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தந்தையை ஏமாற்றி காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவியின் செயல் ஹைதராபாத் பகுதியில் பேசும் பொருளாகியுள்ளது. இதனை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் தன் பெண்ணை கடத்திய கும்பல் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடி வருகின்றனர்.