முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்..
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ஒரே நாளில் 2 முறை ஓபிஎஸ் முதல்வரை சந்தித்தது பேசுபொருளாகியது.. கடந்த 31-ம் தேதி காலையில் பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது முதல்வரை சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.. அதன்பின்னர் தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.. பின்னர் அன்றைய தினமே மாலை முதல்வர் ஸ்டாலினின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததது.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ முதல்வரின் உடல் நலனை விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை.. உடல்நலனை விசாரிக்கவே சந்தித்தேன்.. அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் இல்லை.. எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.. ” என்று கூறியிருந்தார்..
இதை தொடர்ந்து ஓபிஎஸ் அணி திமுக கூட்டணியில் இணையக் கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இதுகுறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.
இந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதார் திரு. மு.க. முத்து அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் B Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான “பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்பதுதான் என் நினைவிற்கு
வருகிறது.
அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை
விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான். இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான்.
மாண்புமிகு அம்மா அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : சாராய கடைகளை மூட துப்பில்லை.. உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சீரியல் ஷூட்டிங்..!! – அன்புமணி அட்டாக்