தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தீவிரப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இன்று ஈரோட்டில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நாமக்கல் மற்றும் கரூரில் அவர் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு அவர் அங்கு இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்த நேரத்தில்தான் அவர் திருச்சிக்கே வந்து சேர்ந்தார். அங்கிருந்து அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட சாலைப் பயணத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைவிட கொடுமையாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய இரண்டாம் கட்டத் தலைவர்கள், தங்களை விஜய்யிடம் முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர்.
இதனால், தாகம் மற்றும் பசியால் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான குடிநீர் கூட வழங்கப்படவில்லை. நெரிசலில் சிக்கிப் பலர் மயக்கமடைந்ததும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னும் விஜய்யைப் பார்க்க ஓடிய ரசிகர்களின் வெறித்தனமான அன்பும் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நிர்வாகிகளின் திட்டமிடல் இல்லாததால் கரூரில் நிலைமை இன்னும் மோசமானது. மதியம் 3 மணிக்கு வர வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குத்தான் அங்கு வந்து சேர்ந்தார். காலை 11 மணி முதல் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக சோறு, தண்ணீர் இன்றி விஜய்க்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அவர் வந்தவுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கினர்.
நீண்ட நேர சோர்வு மற்றும் பசியால் நிலைகுலைந்திருந்த நிலையில் ஏற்பட்ட இந்த நெரிசல், உயிரிழப்பு வரை கொண்டு சென்றது. “விஜய் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் இந்தக் கூட்டம் முன்னதாகவே கலைந்திருக்கும்; இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்” என்ற விமர்சனம் இன்னும் நீடிக்கிறது.
இந்த துயரச் சம்பவங்களுக்குப் பிறகு, இன்று ஈரோட்டில் விஜய் தனது பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். ஆனால், ஈரோடு மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சில போஸ்டர்கள் த.வெ.க தரப்பை நிலைகுலைய செய்துள்ளன. “ஈரோடு வரை வந்த நீங்க, அப்படியே கரூருக்குப் போய் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க மாட்டீங்களா?” என்றும், “கரூருக்குப் போக நேரமில்லை, ஆடியோ லாஞ்சிற்காக மலேசியா போக நேரமிருக்கிறதா? வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ” என்றும் கிண்டலாகவும் ஆவேசமாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



