அரசாங்கம் வழங்கும் சில சேமிப்பு திட்டங்கள் மூத்த பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) மற்றும் வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகள் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.
இந்த திட்டங்கள் மூலதன பாதுகாப்புடன், மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் நிலையான வருமானத்தை வழங்குகின்றன. மேலும், அரசு உத்தரவாதம் மற்றும் குறைந்த அபாயம் போன்ற அம்சங்கள் காரணமாக, ஓய்வூதிய காலத்தில் நிதி சிக்கல்கள் இல்லாமல் வாழ விரும்பும் பெண்களுக்கு இத்திட்டங்கள் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக Senior Citizens Savings Scheme (SCSS) திட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இந்தத் திட்டம், வழக்கமான நிலையான வைப்புத்தொகைகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள்:
* முதலீட்டு வரம்பு: ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
* ஐந்தாண்டு முதிர்வுக்குப் பிறகு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
* பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.
* SCSS என்பது ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாக விளங்குகிறது, இது அவர்களுக்கு இடரற்ற, நிலையான வருமான வரிச் சேமிப்பை வழங்குகிறது.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS): உத்தரவாதமான மாதாந்திர வருமானத்தை பெற விரும்பும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, Post Office Monthly Income Scheme (POMIS) ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்தத் திட்டம், முதலீட்டாளர்களுக்கு நிலையான மாதாந்திர வட்டியை வழங்குகிறது. இதன் மூலம் மூலதனத்தைத் தொடாமல் அன்றாட செலவுகள் மற்றும் சிறிய நிதித் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.
பங்கு சந்தை அல்லது கலப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது வருமானம் சற்று குறைவாக இருந்தாலும், சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்க உத்தரவாதம் வழங்கப்படுவது இதன் முக்கிய சிறப்பாகும். அதனால், அதிக வருமானத்தை விட பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் முன்னுரிமை அளிக்கும் பெண்களுக்கு, இந்த POMIS திட்டம் ஒரு நம்பகமான மற்றும் பயனுள்ள முதலீட்டு தேர்வாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வங்கி நிலையான வைப்புத்தொகை (FDs): மூத்த குடிமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வங்கி நிலையான வைப்புத்தொகைகள் (FDs) பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக உள்ளன. பெரும்பாலான வங்கிகள், மூத்த குடிமக்களுக்கு சாதாரண வட்டி விகிதங்களை விட 0.25% முதல் 0.75% வரை கூடுதல் வட்டியை வழங்குகின்றன. இதனால், நிதி பாதுகாப்புடன் நிலையான வருமானம் பெற முடிகிறது.
அதிக வருமானத்தை விரும்பும் பெண்கள், Non-Convertible Debentures (NCDs) போன்ற முதலீட்டு வாய்ப்புகளையும் தேர்வு செய்யலாம். குறிப்பாக AAA மதிப்பீடு பெற்ற NCDகள், வங்கி FDகளை விட சற்று அதிக வருமானம் அளிக்கும். இருப்பினும், இவை குறைந்த அளவிலான ஆபத்தையும் உடையதாக இருப்பதால் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read more: உயர் இரத்த அழுத்தத்தை விரட்டும் பிளாங்க் உடற்பயிற்சி.. யாரெல்லாம் செய்யக் கூடாது..?



