திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி என்னை குற்றவாளி போல் சித்தரிப்பதாக அரக்கோணம் மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர், அண்மையில் தனது கணவரும், திமுக ஒன்றிய முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளருமான தெய்வச்செயல் (40) மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். தனது கணவர், தன்னை திமுக பிரமுகர்களுக்கு விருந்தளிக்க முயல்வதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், புகார் குறித்து காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து, தெய்வச் செயலின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே, திமுக அரசை கண்டித்து அரக்கோணத்தில் கடந்த 21ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து மாணவிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி பேசுகையில், “பணம் பறிக்கும் நோக்கில் மாணவி செயல்படுவதாக தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலில் காவல்துறையினர் என்னை அசிங்கப்படுத்தினர். தற்போது திமுகவினர் மேடை போட்டு பொதுக்கூட்டத்தில் என்னை அசிங்கப்படுத்துகின்றனர்.
நான் யார் மீது புகார் அளித்தேனோ அவர் மீது இதுவரை போலீசார் விசாரணை நடத்தவில்லை. தொடர்ந்து, என்னிடம் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். துணிச்சலுடன் வெளியில் வந்த என்னை குற்றவாளி போல் சித்தரித்து பேசுகிறார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் புகாரளிப்பேன் என்று கூறியுள்ளார்.