தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாகவும், வடசென்னை மற்றும் அசுரன் படத்தில் தனுஷின் அம்மாவாகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மணிமேகலை. இவர், சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். படங்கள் இல்லாத சமயத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான், இவர் வாங்கிய சொந்த காரை ஒருவன் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில் தவணை முறையில் Baleno காரை வாங்கியுள்ளார். ஆனால், தனக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், தனது மகன் கண்ணன் மூலம் படப்பிடிப்புக்கு சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே, தனது மகனின் நண்பர் ரத்னவேல், அவசர தேவைக்காக பணம் வேண்டும் என்று கேட்டதால், ரூ.6 லட்சத்தை கடனாக கொடுத்தார் கண்ணன். விரைவில் பணத்தை கொடுத்துவிடுவதாக கூறிய ரத்னவேல், பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து, நீ தஞ்சாவூருக்கு உடனே வந்தால் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்ல, மகன் கண்ணன் காரில், தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், தஞ்சை புதிய பேருந்து நிலையம் எதிரே ஒரு லாட்ஜில் கண்ணனை தங்க வைத்த ரத்தினவேல், இப்போது என்னிடம் பணம் இல்லை என்றும் மும்பை சென்று தான் பணத்தை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர், கண்ணணுக்கு மும்பை விமான டிக்கெட் போட்டு, தனது நண்பரோடு சென்று பணத்தை வாங்கிக் கொள் என்று ரத்னவேல் அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, கண்ணனின் காரை, ரத்னவேல் ரூ.6 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். பின்னர், மும்பையில் இருந்த திரும்பி வந்த கண்ணன், என்னுடைய கார் எங்கே என கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். பின்னர், ஜிபிஎஸ் உதவியுடன் காரை தேடிச்சென்ற போது தான், ரத்னவேல் காரை அடமானம் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணன் தஞ்சை காவல் நிலையத்தில் ரத்னவேல் மீது புகாரளித்த நிலையில், போலீசார் கண்டு கொள்ளாததால், 4 மாதங்கள் கழித்து நடிகை மணிமேகலை, தஞ்சைக்கு சென்று புகாரளித்துள்ளார்.
பின்பு தான், போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும், காரில் இருக்கும் ஜிபிஎஸை வைத்து, காரை இருக்கும் இடத்தையும், கார் வைத்து இருப்பவர் குறித்தும் போலீசாரிடம் தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் போலீசார், இன்னும் காரை மீட்டுத்தரவில்லை. பயன்படுத்தாத காருக்கு நாங்கள் தான் மாதந்தோறும் ரூ.10,000 செலுத்தி வருகிறோம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, காவல்துறையினர் எனது காரை மீட்டுத்தர வேண்டும்” என கண்ணீர் மல்க நடிகை மணிமேகலை கோரிக்கை விடுத்துள்ளார்.