உணவில் உப்பு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு உண்ணும் உப்பு நம் உடலுக்கு தேவையான சோடியம் சத்துக்களை கொடுகிறது. ஆனால், அதே உப்பை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு மிக மோசமானதாக தான் இருக்கும். ஒரு நாளில் நம் உடலுக்கு 2.3 கிராம் முதல் 5 கிராம் வரை சோடியம் சேர்த்து கொண்டால், போதுமானது. ஆனால், ஒரு நாளில் நாம் பொதுவான உணவுகள் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பை விட துரித உணவுகளின் மூலம் நம் உடலுக்கு செல்லும் உப்பின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் போன்றவற்றில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்படுகிறது.
கருவாடு, ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றிலும் உப்பு அதிகமாக உள்ளது. பின்பு எப்படி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என தோன்றலாம். அவர்கள் உடல் உழைப்பை போட்டு வேலை செய்வதால் தேவையற்ற சத்துகள் உடலில் வேர்வையாக வெளிவருகிறது. தற்போதுள்ள கால சூழலில் உடல் உழைப்பு பெரிதாக இல்லாததால், தேவையற்ற சத்துக்கள் உடலில் தேங்காதவாறு பார்த்து கொள்வது நல்லது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரிலும் கால்சியம் அகற்றி சுவைக்காக சோடியம் சேர்க்கப்படுகிறது. மேலும் பன், ரொட்டி, பன் போன்றவற்றிலும் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் இவற்றின் மூலமும் அதிக உப்பு உடலில் சேர்கிறது.
உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உடலில் வயிற்று புண், இதய சுவர் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகத்தில் கல், உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை உருவாகிறது. மேலும், உப்பு ரத்தத்தில் அதிகமாக கலப்பதால் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் அமிலம் உருவாகி சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டு செல்லும். வளரும் குழந்தைகளுக்கு பின் நாள்களில் எழும்பு அடர்த்தி பிரச்சனை உருவாகும். வயதானவர்களின் உடலில் உப்பு அதிகமாகும் போது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டிவிட்டு சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும் பணியை குறைக்கும். இதனால் உடலில் நச்சு நீர் வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தேங்கிவிடும். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து சமவிகிதாசார உணவுகளை உண்டு நலமுடன் வாழ்வோம்.