கோடை வெயில் வந்துவிட்டால், தினசரி குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு உண்டு. டீ, காஃபி போன்று குளிர்பானங்களையும் தவிர்க்க முடியாத சூழலில் பலர் உள்ளனர். குறிப்பாக, ஆண்களை விட பெண்களே அதிகம் குளிபானங்களை அருந்துகின்றனர். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாடிக்கையாக குளிர்பானங்கள் அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மெனோபாஸ் அடைந்த 98,786 பேர் பங்கேற்றனர். இதய நோய், மார்பக நோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில், தினசரி ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை குளிர்பானம் அருந்தும் பெண்களில் 6.8% பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 85% அதிகரித்துள்ளது. மேலும், நீடித்த கல்லீரல் அழற்சியால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் 68% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை சர்க்கரை கலக்கப்பட்ட குளிர்பானங்களை மாதத்திற்கு 3 முறைக்கும் குறைவாக குடிக்கும் சாதாரண மக்களிடம் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வில் பங்கேற்ற முன்னணி ஆய்வாளர் லாங்காங் ஜஹோ கூறுகையில், “எங்களுக்கு தெரிந்தவரை செயற்கை குளிர்பானங்கள் பயன்பாடு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுதான்” என்றார்.
ஃபைப்ரோசிஸ், நீடித்த கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மருத்துவ ஆய்வு மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மூலமாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. கல்லீரல் பாதிப்பு தொடர்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது. தங்கள் ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும். தற்போது ஆய்வக பரிசோதனை அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.