நாட்டில் அடுத்தக்கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான 3ஆம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு ரூ.50 தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம், அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம்.

தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு தங்க பத்திரம் தான் சிறந்த முதலீடு. எல்லா நெருக்கடியிலும் தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயரக்கூடும். தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதுமட்டுமின்றி ஆண்டுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் எதுவும் கிடையாது. தங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் தங்க பத்திரத்தில் கிடையாது. வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை மூலமாக தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.