கோடை வெயில் அதிகரித்து வந்தாலும் மழை அடிக்கடி வந்து நம்மை மகிழ்விக்கிறது. எந்த காலமாகி இருந்தாலும் நமது உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கம்பங்கூழ் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், பாரம்பரிய முறையில் கம்பு கூழ் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு – 1/2 கப்.
தண்ணீர் – 2 கப்.
உப்பு – தேவையான அளவு.
மோர் – தேவையான அளவு.
செய்முறை :
— கம்பை முதல் நாள் இரவே தண்ணீர் சேர்த்து ஊறவைக்க வேண்டும். கம்பு குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வேண்டும்.
— அடுத்த நாள் காலையில் தண்ணீரை வடிகட்டி கம்பை தனியே எடுத்து வைக்கவும்.
— இப்போது மிக்சி ஜார் ஒன்றை எடுத்து தண்ணீர் சேர்க்காமல், கம்பை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
— இப்போது ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்ததும், அரைத்த கம்பை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடிவிட வேண்டும்.
— அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். குக்கர் பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு முறை கிளறவும்.
— கம்பு சேர்மம் நன்கு ஆறியதும், கைகளை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி குக்கரில் இருந்து தேவையான அளவு கம்பு சேர்மத்தை உருட்டி தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
— இதை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விட வேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
— மறுநாள் காலையில் இதனுடன் மோர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். நன்றாக கரைத்த கூழை தனியாக கிண்ணத்தில் ஊற்றி உங்களுக்கு பிடித்த ஊறுகாய் மூலம் பரிமாறலாம்.