அண்ணன் – தங்கை உறவுகள் என்பது எப்போதுமே சுவாரஸ்யமானவை. தமிழ் சமூகத்தில் அதிக காவியத்தன்மை கொடுக்கப்பட்ட உறவும் கூட. அந்தக் காலத்து ‘பாசமலர்’ தொடங்கி, ‘கிழக்குச் சீமையிலே’ என பல படங்களில் அண்ணன் – தங்கை கதைகள் காவியங்களாக காண்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோரிடம் கூட சொல்ல தயங்கும் சில விஷயங்களை அண்ணன் – தங்கை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
அண்ணன் – தங்கை உறவுகள் கிட்டத்தட்ட ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் ரகத்தில் இருக்கும். அப்பா, அம்மாவிடம் போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறும். அதே சமயத்தில் உள்ளே ஒரு வகை அன்பும் இருக்கும். இந்த உறவை சிறப்பிக்கும் விதமாகவே ரக்ஷ பந்தன் கொண்டாடப்படுகிறது. ஆனால், சகோதரிகள் தங்கள் சகோதரன் இறக்க வேண்டும் என்று சபிக்கும் இடமும் உள்ளது.
ஆம்… சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் உள்ள ஒரு சமூகத்தில் இப்படியொரு சபிக்கும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, சகோதரிகள் முதலில் தங்கள் சகோதரனை இறக்கும்படி சபிப்பது இங்கே ஒரு வழக்கமாக உள்ளது. சபித்த பிறகு, அந்த சகோதரி தனது நாக்கை ஒரு முள்ளால் குத்தி பரிகாரம் செய்ய வேண்டுமாம். பிறகு, தங்கள் சகோதரர்களின் நெற்றியில் திலகம் பூசி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென சகோதரிகள் வாழ்த்துவார்களாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக அங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதாவது இந்த நடைமுறை, சகோதரரின் பாதுகாப்பிற்காகவும், யமதர்ம ராஜாவின் கவலையைக் குறைக்கவும் இவ்வாறு சபிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், யமதர்மராஜா பூமிக்கு வந்தவுடன், சகோதரியால் சபிக்கப்படாத சகோதரனை கொல்ல வேண்டும் என்று நினைப்பாராம். இதனால் தான் பெண்கள் தங்கள் சகோதரனை சபிக்கிறார்கள். இந்த நடைமுறை யமதர்ம ராஜாவிடம் இருந்து சகோதரனை பாதுகாப்பதற்காகவே என கூறப்படுகிறது.