திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால், நீதிபதி ஸ்ரீமதி இந்த வழக்கில் தீர்வளிக்க மேலதிக ஆய்வு தேவைப்படுவதால், அதை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருக்கிறார்.
இவ்வாறாக, ஒரே அமர்வில் இரு வெவ்வேறு தீர்ப்புகள் வந்ததால், வழக்கு குறித்து இறுதி முடிவை எடுக்க மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். இதனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவில் முடிவெடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கின் பின்னணி: மதுரையில், திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர் கந்தூரி விழா நடத்துவதை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேவேளை சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு மற்றும் கோழியுடன் செல்வதற்குத் தடையையும் காவல்துறை விதித்தது.
இதையடுத்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கண்ணன், முத்துகுமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.
இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்பட்டது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: ஒரே போட்டோ.. விஜய் உடன் டேட்டிங் என தீயாக பரவிய வதந்தி… த்ரிஷா போட்ட ‘நச்’ பதிவு..