இந்திய தபால் துறை (India Post) அஞ்சல் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வங்கிக்கு நிகரான பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக RD, TD, MIS, SCSS, PPF, SSA, KVP உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளன. இவற்றில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (TD) திட்டம், வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit – FD) திட்டங்களைவிட அதிக வட்டி விகிதங்களை வழங்குவது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகபட்ச வட்டி விகிதம் :
தபால் நிலையங்களில் FD கணக்குகள் ‘டைம் டெபாசிட்’ (TD) திட்டம் என்ற பெயரில் திறக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு தொகைகள் வழங்கப்படுகின்றன.
கால அளவு மற்றும் வட்டி விகிதம் :
1 ஆண்டு வைப்புத்தொகை – 6.9%
2 ஆண்டு வைப்புத்தொகை – 7.0%
3 ஆண்டு வைப்புத்தொகை – 7.1%
5 ஆண்டு வைப்புத்தொகை – 7.5%
தற்போது நாட்டில் உள்ள எந்தவொரு பெரிய வங்கிகளும் வழங்காத அளவுக்கு, 5 வருட வைப்புத் தொகைக்கு அஞ்சல் அலுவலகம் அதிகபட்சமாக 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 1 லட்சம் முதலீட்டின் பலன் :
நீங்கள் 5 ஆண்டு அல்லது 60 மாத நிரந்தர வைப்புத் திட்டத்தில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வின் போது உங்களுக்கு மொத்தமாக ரூ.1,44,995 திரும்பக் கிடைக்கும். இதில், ரூ.44,995 என்பது நிலையான வட்டித் தொகையாகும்.
அஞ்சல் அலுவலக நிரந்தர வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000 ஆகும். அதிகபட்ச வைப்புத் தொகை வரம்பு என்று எதுவும் இல்லை. இதில் நீங்கள் ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கை திறக்கலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக 3 பேர் வரை சேர்ந்து கொள்ளலாம்.
தபால் நிலையங்கள் மத்திய அரசால் நேரடியாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் முதிர்வின் போது அரசாங்க உத்தரவாதத்துடன் நிலையான வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், வங்கிகளில் மூத்த குடிமக்கள் சில திட்டங்களில் கூடுதலாக 0.50% வட்டி பெறுவது குறிப்பிடத்தக்கது.



