தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடன இயக்குனர் கௌரி சங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததாகவும் அவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த டான்ஸ் யூனியன் சங்கமும் தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சக நடன இயக்குனரை அடித்தது மிகப்பெரிய தவறு என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தை பெப்சி சங்கத்திடம் கொண்டு சென்றாலும், அந்த சங்கத்தின் தலைவர் செல்வமணி நடுநிலையாக இருந்து அவருடைய வேலையை செய்யாமல் தினேஷுக்கு ஆதரவாக பேசி வருவதாகவும் கூறியுள்ளனர். இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணமே, ஆர்.கே.செல்வமணி தான் என்று நடன இயக்குனர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் மாஸ்டர் இருக்கும் நிலையில், சங்கத்தின் சீர்கேடு, அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து சக நடன இயக்குனர் கௌரி சங்கர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தான், அவரை தினேஷ் அடித்துள்ளார். இதனால், சங்கத்தின் தலைவராக இருக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை என கௌரி சங்கர் கூறியதால், கோபமடைந்த தினேஷ் அவரை சரமாரியாக அடித்துள்ளார்.
அதாவது, தினேஷ் மாஸ்டருக்கு முன்னதாக, மாரி என்பவர் தான் தலைவராக இருந்துள்ளார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதனால், தற்போதைய தலைவரான தினேஷ் மாஸ்டர் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அதற்கு தினேஷ் மறுத்துள்ளார். ஏனென்றால், முன்னாள் தலைவர் மாரியும், தினேஷ் மாஸ்டரும் நண்பர்களாம்.
அதுமட்டுமின்றி, லியோ படத்தின் மூலம் டான்ஸ் யூனியனுக்கு ரூ.35 லட்சம் வர வேண்டிய பணமும் வரவில்லையாம். அதைப்பற்றியும் தினேஷ் மாஸ்டர் ஒன்றும் கேட்கவில்லையாம். இதனால், இது ஒரு மிகப்பெரிய ஸ்கேன் என்றும் அதற்கும் தினேஷ் உடந்தையாக இருந்திருக்கிறார் என்றும் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் அவர் மீது புகாரளித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கடந்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடனம் ஆடியதற்கான சம்பளமும் இதுவரை கிடைக்கவில்லை என உறுப்பினர்கள் குமுறுகின்றனர்.
லியோ படத்தின் சம்பள பாக்கியை தினேஷ் மாஸ்டர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.