அதிகாலையில் எழும்புவது உடற்பயிற்சி செய்வதற்கும், அன்றாட வேலைகளை நன்றாக செய்வதற்கும் உரிய நேரத்தை தருவதோடு, நமது செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. நாள் முடியும்போது, நன்றாக உறக்கம் வருவதற்கு அதிகாலையில் துயில் எழும்புவதே காரணமாகிறது. காலை 5:30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்திருப்பது பலருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்டவர்கள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை இந்த வழக்கத்தின் நன்மைகளை அறிந்திருப்பார்கள். ஆனால் அதிகாலையில் உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது எது?. சரி! காலையில் எழும்புவதற்கு என்ன செய்யலாம்?
அமைதியான மனதின் சக்தி: அதிகாலை நேரம் என்பது உலகம் அமைதியாக இருக்கும் ஒரு அரிய நேரம். அலைபேசிகள் ஒலிக்காது, மின்னஞ்சல்கள் இல்லை, கவனச்சிதறல்கள் இல்லை. இந்த மன அமைதி தெளிவு, பிரதிபலிப்பு மற்றும் கவனம் செலுத்திய சிந்தனைக்கு ஏற்றது – நாள் முழுவதும் உச்சத்தை எட்டியவுடன் இதை அடைவது கடினம். இந்த நேரத்தில் தியானம் அல்லது நாட்குறிப்புப் பயிற்சி செய்வது அன்றைய நாளுக்கு ஒரு சக்திவாய்ந்த தொனியை அமைக்க உதவும்.
காலை வழக்கம் ஒழுக்கத்தை வளர்க்கிறது: வெற்றி பெரும்பாலும் திறமையை விட நிலைத்தன்மையையே சார்ந்துள்ளது . அதிகாலையில் எழுந்திருப்பது என்பது சுய ஒழுக்கத்தின் ஒரு வடிவமாகும், மேலும் அதைச் சுற்றி நீங்கள் உருவாக்கும் வழக்கம் – உடற்பயிற்சி, வாசிப்பு, திட்டமிடல் – சிறிய வெற்றிகளின் தாளத்தை உருவாக்குகிறது. காலப்போக்கில், இந்த சிறிய வெற்றிகள் மிகப்பெரிய வளர்ச்சியாக மாறுகின்றன.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம்: அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் சீரான காலை உணவை உட்கொள்வார்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள், இரவில் நன்றாக தூங்குவார்கள். அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . உங்கள் உடலின் இயற்கையான சர்க்காடியன் தாளத்தை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துடன் ஒத்திசைப்பதன் மூலம், நீங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்தி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறீர்கள். நம் இலக்குகள் அல்லது பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த நேரமில்லை என்று நாம் அடிக்கடி புகார் கூறுகிறோம். அதிகாலை நேரம் நமக்கு அந்த நேரத்தைத் திருப்பித் தருகிறது.
அதிகாலையில் எழுந்திருப்பது எப்படி: வீட்டில் கும்பகர்ணன் என்று பெயர்பெற்றவர்களா நீங்கள்? வெயில் வருவதுகூட தெரியாமல் காலை பத்து மணி வரைக்கும் உறங்குபவர்களா? ஒரே நாளில் தீர்மானம் எடுத்து, அதிகாலை ஆறு மணிக்கு எழும்ப முயற்சிக்காதீர்கள். உறங்கி பழகிய உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்க சிரமப்படும். அரைமணி நேரம், ஒரு மணி நேரம் அதாவது காலை 8:30 மணி, 7:30 மணி என்று கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை கூட்டி வாருங்கள். சில வாரங்களில் அதிகாலை 5:30 அல்லது 6 மணிக்கு எழும்ப உங்கள் உடல் பழகிவிடும்.
முடிந்த அளவு சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது அதிகாலையில் விழிக்க உதவியாக இருக்கும். இரவில் நீண்டநேரம் கண்விழித்து இருந்துவிட்டு தாமதமாக படுத்தால், அதிகாலையில் எழும்ப இயலாது. தொடர்ந்து தாமதமாக படுத்து, அதிகாலையில் விழித்தால் தூக்கக்குறைவினால், மறுநாள் முழுவதும் சோர்வும், மந்த தன்மை நம்மை ஆட்கொண்டுவிடும். ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம். உதாரணமாக இரவில் 10 மணிக்கு படுக்கைக்குச் சென்றால், எட்டு மணி நேரம் தூங்கி காலையில் ஆறு மணிக்கு புது உற்சாகத்தோடு எழும்ப முடியும்.
ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு அவசியம். நாம் நன்றாக ஆழ்ந்து உறங்கும்போது, உடலுக்குள் பல செயல்பாடுகள் நடக்கின்றன. செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றத்தினால் உடலிலுள்ள நச்சுப்பொருள் பிரிக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நன்கு ஆழ்ந்து தூங்கி காலையில் எழுந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்; சோர்வு அண்டாது.
அதிகாலையில் விழிப்பதில் அலாரத்தின் உதவி முக்கியமானது. நீங்கள் விழிக்க வேண்டியதற்கு கால் மணி நேரம் முன்னதாகவே அலாரம் வைத்து விடுங்கள். அதாவது நீங்கள் 6 மணிக்கு எழும்ப வேண்டுமென்றால், அதிகாலை 5:45 மணிக்கு அலாரம் வைக்க வேண்டும். அப்போது தான் உடல் மெதுவாக ஆயத்தமாகி எழும்புவதற்கு நேரம் கிடைக்கும். ஊரையே கூட்டுவது போன்று அதிக சத்தத்தோடு அலாரம் வைக்காதீர்கள். அது அனைவரது தூக்கத்தை கெடுத்து விடும். அதேவேளையில், உங்கள் படுக்கையை விட்டு சற்று தள்ளி, நீங்கள் எழுந்து சென்று நிறுத்துவதுபோன்று அலாரத்தை வைத்து விடுங்கள். அப்போதுதான், படுக்கையிலிருந்து எழுந்து சென்று, அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் படுக்கைக்கு வர மாட்டீர்கள்.
Readmore: சனி தோஷம் உள்ளவர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..?