இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமாக விமானம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அகமதாபாத்தில் இன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணம்? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்த துயர விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமாக விமானம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இவ்வளவு சீக்கிரம் அதனை உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட AI-171 விமானத்தின் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு Mayday என்று அழைக்கப்படும் அவசரகால அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தால், விமானியால் இந்த அழைப்பு அனுப்பப்படும் என்று இதுகுறித்து நன்கு அறிந்த விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தால், விமானிகள் அருகிலுள்ள விமான நிலையம் அல்லது ஓடுபாதையில் விரைவில் விமானத்தை தரையிறக்க முடியும் என்று விமான நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமானத்தின் வேகம் வெவ்வேறு நகரம், வெப்பநிலை மற்றும் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்றும் ஒரு நிபுணர் கூறினார். விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர், இது ஒரு நடுத்தர அளவு, இரட்டை எஞ்சின், அகலமான உடல் ஜெட் விமானமாகும். எரிபொருள் திறன், வசதியான பயணிகள் அனுபவம் மற்றும் பெரிய ஜன்னல்கள் போன்ற புதுமையான வடிவமைப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றது. ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியது என்பது நம்பமுடியாத ஒரு விஷயம் என்று நிபுணர் மேலும் கூறினார்.
இதனிடையே, ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதியதால், கல்லூரி மாணவர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் நேரடியாக மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. விபத்து நடந்த நேரத்தில் விடுதியில் மாணவர்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) கூறியதால், பல மாணவர்கள் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய மருத்துவ மாணவர் ஹர்ஷித், விமானம் தான் இருந்த கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் மோதிய நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறினார். விபத்து நடந்த இடத்தில் இருந்த ஹர்ஷித்தின் நண்பர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானம் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் உள்ளூர் மருத்துவர்கள் தங்கியிருந்ததாக ஹர்ஷித் தெரிவித்தார்..
Read More : அகமதாபாத் விமான விபத்து: இந்தியாவை உலுக்கிய மோசமான 10 விமான விபத்துகள்..