தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். ’அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது 75 வயதாகும் நடிகர் ராஜேஷ் நேற்று திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மருத்துவர் காந்தராஜ், “யோகா செய்வதால் சில பயன்கள் உள்ளன. நான், சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, நோயாளிகளுக்கு யோகா பயிற்சி கொடுத்தோம். ஆனால், அவர்களுக்கு எந்த மாறுதலும் தெரியவில்லை. ஆசனங்கள் செய்வதால், இதய நோயின் தீவிரமும் குறையவில்லை. இதனால், அந்த முயற்சியை கைவிட்டுவிட்டோம். எந்த பயிற்சியாக இருந்தாலும் 50 வயதாகிவிட்டதால், நிறுத்திவிட வேண்டும்.
யாராக இருந்தாலும், 40 வயதுக்கு மேல் ஜிம்முக்கு செல்வதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல், இரவு ஓய்வில் இருந்துவிட்டு, காலையில் வியர்க்க வியர்க்க நடைபயிற்சி செல்லக் கூடாது. மாரடைப்பு என்பது சிந்திப்பதற்குள் உயிர் போயிடும். நடிகர் ராஜேஷ் உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்தது அவரது மரணத்தை எளிமையாக்கியுள்ளது. 79 வயதுக்கு பிறகுதான் தன்னுடைய மரணம் நடக்கும் என்று அவர் கணித்திருந்தார். ஆனால், மரணத்தை யாராலும் கணிக்க முடியாது. பைபாஸ் சர்ஜரி சமீபத்தில் தான் செய்திருந்தார். ஆனால், எல்லாருக்குமே உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பார்த்துதான் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிரபல மருத்துவர் சொக்கலிங்கம் ராஜேஷ் மரணம் குறித்து கூறுகையில், “இந்தியாவில் 25 வயதிலேயே ஆண், பெண் இரு பாலரும் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 90 பேர் உயிரிழக்கின்றனர். சீரான எண்ணம், சீரான உணவு, சீரான உடற்பயிற்சி இந்த மூன்றையும் கடைபிடித்தால், இதயத்தின் ஆயுளை நீட்டிக்க முடியும். மரணம் நேர்வதற்கு இந்த மூன்று மந்திரங்களைக் கடைபிடிக்காததே முக்கிய காரணம்.
கொலஸ்ட்ரால் படிவதற்கு 100 சதவீதம் மகிழ்ச்சி இழப்பதே காரணம். கொலஸ்ட்ரால் நம் உடலில் படிவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். நடிகர் ராஜேஷுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவருக்கு மன அழுத்தம் இருந்திருக்க வேண்டும். உலகளவில் மாரடைப்பு என்பது காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் வரும். இரவில் சரியாக தூக்கம் இல்லாதது, தாமதமாக சாப்பிடுவது, மன அழுத்தத்துடன் தூங்க செல்வதால் அட்ரீனல் ஹார்மோன் அதிகரிக்கும். இதுதான் மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணம்.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிந்து அடைப்பு ஏற்பட 20 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், திடீர் மன அழுத்தம் காரணமாக ரத்தக்குழாயில் ஒரு சிறிய கீறல் விழுந்து, ரத்தம் உறைந்துவிடும். இதனால் தான் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு கரோனரி த்ரோம்போசிஸ் என்று பெயர். ராஜேஷுக்கும் இதுதான் நடந்திருக்க வேண்டும். எனவே, 20 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சிஜி, எக்ஸ்ரே ஆகிய ஐந்தையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.