பொள்ளாச்சி அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தனது மனைவியுடன் ஓடிச் சென்ற வாலிபரை, அவரது கணவர் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை அண்ணா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (27), அதே பகுதியைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான வட்டிப் பணத்தைச் செலுத்தச் சென்ற சமயத்தில், சந்தானகிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் ராஜாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் சந்தானகிருஷ்ணனுக்கு தெரியவரவே, அவர் இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், எச்சரிக்கையை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மற்றும் கிருஷ்ணவேணி இருவரும் ஊரை விட்டு ஓடித் தலைமறைவாகினர். இதனால், மனமுடைந்து போயிருந்த சந்தானகிருஷ்ணன் தனது மனைவியை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், புகழ்பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ராஜா தனது மனைவியுடன் ஊருக்குத் திரும்பியிருப்பதை சந்தானகிருஷ்ணன் அறிந்தார். இதையடுத்து, ஆத்திரத்தில் ராஜாவை தேடிச் சென்ற அவர், ஆனைமலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே ராஜாவை வழிமறித்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து, ராஜாவின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாவைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை போலீசார், படுகாயமடைந்த ராஜாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்தானகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



