தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பசுமைக் குன்றுகளின் மத்தியில் வீற்றிருக்கிறார் குறிஞ்சி நிலக் குமரனான முருகப்பெருமான். மூலிகை மணமும், தெய்வீக அதிர்வுகளும் நிறைந்திருக்கும் இத்தலமே வரலாற்றுச் சிறப்புமிக்க தோரணமலை முருகன் கோவில் ஆகும்.
அகத்தியர் மற்றும் தேரையர் போன்ற புகழ்பெற்ற சித்தர்கள் தங்கள் அரிய மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்த மலையை தேர்ந்தெடுத்ததாக பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மூலிகைகள், தியான ஆற்றல் மற்றும் தெய்வீக அலைகளால் நிரம்பிய ஒரு மாபெரும் மையம் இருந்திருக்கிறது.
தேரையரின் ஜீவசமாதி :
புராணங்களின்படி, அகத்தியரின் சீடரான ராமதேவர், காசிவர்மன் என்ற அரசனுக்கு சிகிச்சை அளித்தபோது ஒரு அதிசயத்தை நிகழ்த்தியதால், அவருக்கு ‘தேரையர்’ என்ற பெயர் வந்தது. இவரின் ஜீவசமாதி இன்றும் மலையடிவாரத்தில் காணப்படுவதால், மருத்துவப் படிப்பை விரும்பும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
தலபுராணத்தின்படி, அகத்தியருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், அவருக்கு ஆலோசனை அளித்து, அந்த இடத்தில் மாபெரும் மருத்துவக் கலாசாலையை நிறுவச் செய்து, 72 வகையான பாட வகுப்புகளையும் உருவாக்கி தந்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் பல சித்தர்கள் இங்கு அருவமாக சுற்றி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
1,193 படிகளில் முருகன் தரிசனம் :
தோரணமலை மலைப் பாதையில் இன்னும் அரிய வகை மூலிகைகள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதில் சில மூலிகைகள் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இதனால் தோரணமலை, சித்த மருத்துவ மரபின் உயிர் தளமாக கருதப்படுகிறது. 800 அடி உயரமுள்ள இந்த மலை உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமான் சன்னிதிக்குச் செல்ல 1,193 படிகள் கடந்து செல்வது ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக பக்தர்களால் கருதப்படுகிறது. மலைக்கோயிலுக்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மலை உச்சியில் உள்ள குகை வடிவிலான சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் முருகனை தரிசிப்பதற்கு முன், பக்தர்கள் அருகே அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் வழிபட்டுச் செல்வது வழக்கமாகும். அடிவாரத்தில் விநாயகர், சிவன், நவகிரகங்கள் போன்ற சன்னிதிகளும் அமைந்து இத்தலத்தின் ஆன்மீக சிறப்பை கூட்டுகின்றன.
விவசாயச் செழிப்புக்கான ‘வருண கலச பூஜை’ :
இத்தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையிலும் நடைபெறும் “வருண கலச பூஜை” மிகவும் பிரசித்தி பெற்றது. மலைத் தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் 21 கலச நீரானது, விவசாயிகளின் விதை, நாற்று மற்றும் வேளாண் கருவிகளுடன் சேர்த்துப் பூஜை செய்யப்படுகிறது. விவசாயிகள் செழிக்கவும், நிலம் வளம் பெறவும், மழை அருளவும் வேண்டி இச்சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் நிர்வாகம் மலையடிவாரத்தில் விளையாட்டுத் திடல், நூலகம், இலவச உணவு வசதி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, முதியோர் காப்பகம் போன்ற பல்வேறு சேவைகளையும் மேற்கொண்டு வருகிறது. பௌர்ணமி தினங்களில் நடைபெறும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வதோடு, காற்றில் “வேல் வேல்” என்ற ஒலி எதிரொலிக்கும் போது, தோரணமலை முருகன், சித்தர்கள் வழிபட்ட தெய்வம் மட்டுமல்ல.. உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்கும் ஒரு ஆன்மீக மருந்தாகவே உள்ளார் என்பதை உணரலாம்.
Read More : நோட்..! மாணவர்களுக்கு எப்பொழுது கோடை விடுமுறை…? வெளியான முக்கிய அப்டேட்…!



