பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பைக்காக ஏங்கிய பெங்களூரு அணிக்கு இந்தாண்டு தான் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இறுதி யுத்தத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி கோப்பையை வென்றது இதுவே முதல்முறை.
இதை கொண்டாடும் விதமாக பெங்களூருவில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பெங்களூரு விதானசவுதா மற்றும் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கு விழா எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு கர்நாடகா அரசு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான், இந்த கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் காமாட்சி தான் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். தந்தை மூர்த்தி, தனியார் பள்ளியில் தளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். காமாட்சி, பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்றைய கூட்ட நெரிசலில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த காமாட்சியின் உடல் பெங்களூருவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது உடல் இன்று உடுமலைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் உடுமலைப்பேட்டையில் உள்ள காமாட்சி குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.